நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்-ராமதாஸ்
திண்டிவனம்: சோனியா காந்திக்கு இருக்கும் பெருந்தன்மை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்து முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வழக்குகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து தகவல் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.
இதில் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது வியப்பாக உள்ளது. அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டியவர் துணை ஆட்சியராக உள்ள மூத்த அதிகாரி.
அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்ததாக கூறும் முதல்வர், துணை ஆட்சியராக உள்ள உயர் அதிகாரியின் புகாரை நம்பாதது வியப்பாக உள்ளது.
அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான விவகாரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மனித உரிமை ஆணையம் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்திடமும் புகார் செய்த பிறகுதான் காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இப்போது அமைச்சர் சுரேஷ்ராஜன் மீதான வழக்கில் எந்தவித குற்றசாட்டும் இல்லை என்று கூறுகிறார். இது காவல் துறையின் விசாரணைக்கு இடர்பாட்டை ஏற்படுத்தும். இதுதான் நீதியா? தர்மமா?.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீது புகார் கூறுபவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் காவல் துறையினர் விசாரித்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையை முதல்வர் விசாரித்து அறிந்ததாகவும், இந்த வழக்கிலும் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறுகிறார்.
முகாந்திரம் உள்ளதா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் விசாரித்து அறிவிக்க வேண்டும். முதல்வர் எப்படி தீர்ப்பு வழங்கலாம்.
அமைச்சர் ராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு ஒரு நீதி, மற்ற அமைச்சர்களுக்கு ஒரு நீதியா அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்தது போல் மற்ற அமைச்சர்களையும் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரையில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
கேள்வி: பாமக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தால் பேசுவோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
ராமதாஸ்: ஜெயலலிதா தனது கருத்தை கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
கேள்வி: காங்கிரஸ் தலைமையில் அதிமுக-பாமக மற்றும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமையுமா?
ராமதாஸ்: தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
கேள்வி: தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இதுவரை இடம் அளிக்கப்படவில்லையே?
ராமதாஸ்: சோனியா காந்திக்கு இருக்கும் பெருந்தன்மை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் அதிக இடத்தில் வெற்றி பெற்ற போதும் அங்கு கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. ஆனால், திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற்றப்பட்டுள்ளது.
இனி கம்யூனிஸ்டுகளும் வெளியேறி, காங்கிரசார் தமிழக அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று வற்புறுத்தும் நிலை வந்தால் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்றார்.












Click it and Unblock the Notifications