பதவியை காக்க மீண்டும் காஷ்மீர் விவகாரம்-முஷாரப்பின் சுயநலம்
இன்று பாகிஸ்தானி்ன் 61வது சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், மாகாண கவர்னர்களம மத்தியில் உரையாற்றினார். இதை அந் நாட்டு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நேரடியாக ஒளி-ஒலி பரப்பின. (இதற்கு அரசிடம் அனுமதி பெறவே அவர் பெரும்பாடுபட்டது குறிப்பிடத்தக்கது). அப்போது அவர் கூறியதாவது:
ஸ்ரீநகரில் அல்லது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 22 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். (அமர்நாத் நில விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை சொல்கிறார்). இந்த மனித உரிமை மீறல்களையும், ஜம்மூ-காஷ்மீரில் நடந்து வரும் கொலைகளையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பாகிஸ்தானின் இதயத்தில் காஷ்மீரின் இதயத் துடிப்பு உள்ளது. அனைத்து பாகிஸ்தானியர்களும் காஷ்மீரிகளுக்கு உறுதுணையாக உள்ளனர். காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு ஒவ்வொரு பாகிஸ்தானியரும் துணை நிற்பர்.
பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தீவிரவாதத்தை எதிர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். இதற்கு நம் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மோதல் போக்கை கைவிட்டு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுட் நடந்து கொள்ள வேண்டும் (தனது பதவியை பறிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறார்).
நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை நாம் மறக்க வேண்டும் என்றார்.
ஆனால் தனது பதவி குறித்தோ, ராஜினாமா முடிவு குறித்தோ, எதிர்கால திட்டம் குறித்தோ அவர் ஏதும் பேசவில்லை. இதன்மூலம் கண்டனத் தீர்மானத்தை எதிர்கொள்ளவும், அதே நேரத்தில் பதவியில் நீடித்து அரசுடன் மோதவும் அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியா கண்டனம்:
இதற்கிடையில், காஷ்மீர் கலவரத்தில் ஹுரியத் தலைவர் உள்பட பலர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் உண்மைக்கு மாறான அர்த்தமற்ற விவாதத்தை மீண்டும் பாகிஸ்தான் தொடங்க நினைக்கிறது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச தலையீட்டை கோரும் பாகிஸ்தானின் முயற்சி சட்டவிரோதமானது.
இதனால் இதுபோன்ற கண்டனத்துக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.