இந்திய சுதந்திர தினம்: ஜார்ஜ் புஷ் வாழ்த்து
வாஷிங்டன்: இந்தியாவின் 62வது சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் புஷ்ஷின் அலுவலகம் இந்திய- அமெரிக்க சமுதாயத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், இந்தயாவின் 62வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
இந்த நேரத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு சிறப்பாக இருப்பது அனைவராலும் நினைவு கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
விடுதலையை நோக்கிய இந்தியாவின் பயணம் மிகப் பெரிய வரலாறு. ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம் அது. மகாத்மா காந்தி தலைமையில் அமைதி வழியிலும், வன்முறையற்ற பாதையிலும் பீடு நடை போட்டு சாதித்த விடுதலை இந்தியாவின் விடுதலை.
1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்றது, தனது லட்சியத்தை அடைந்தது. ஜனநாயக நாடாக மலர்ந்தது. இதன் மூலம் விடுதலை கிடைப்பது தாமதமாக ஆனாலும், அது மறுக்கப்படாது என்ற உயரிய தத்துவம் வெளிப்படுகிறது.
அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்திய அமெரிக்கர்களின் பங்கு மிகப் பெரியது. இந்திய அமெரிக்கர்களின் பங்களிப்பை நாம் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுக்கு இந்திய அமெரிக்கர்கள் மிகச் சிறந்த முறையில் பங்காற்றி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் நானும், லாராவும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் புஷ்.
ஒபாமா வாழ்த்து:
அதே போல இந்திய சுதந்திரத்தையொட்டி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவும் நாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
21ம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை இந்தியா-அமெரிக்கா இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications