பாக். ரயில் பயணிகளை வீடியோவில் படம் பிடிக்க உத்தரவு
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ரயில் பயணிகளை, எல்லையில் அமைந்துள்ள அட்டாரி மற்றும் முன்னாபாவோ ரயில் நிலையங்களில் வைத்து வீடியோவில் படம் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுறுவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அதி நவீன கருவிகளுடன் கூடிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான டெண்டருக்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அட்டாரி ரயில் நிலையம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள முன்னாபாவோ ரயில் நிலையங்களில் இந்த வீடியோ புகைப்பட ஏற்பாடு அமல்படுத்தப்படும். இந்த ரயில் நிலையங்கள், இந்திய - பாக். எல்லையில் உள்ளன.
பாகிஸ்தானிலிருந்து வரும் ரயில் பயணிகளை வீடியோவில் படமாக்குவதுடன், பயணிகள் குறித்த விவரங்களையும், அவர்கள் இந்தியாவிலிருந்து எப்போது திரும்பிச் செல்வார்கள், செல்கிறார்கள் என்ற விவரத்தையும் ஐபி பதிவு செய்து கொள்ளும்.
தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே தார் எக்ஸ்பிரஸ் மற்றும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்கள் ஓடிக் கொண்டுள்ளன. இரு ரயில்களும் அட்டாரி, முன்னாபாவோ வழியாக செல்கின்றன.
எல்லை தாண்டி வரும் பாகிஸ்தான் பயணிகள் குறித்த கண்காணிப்புக்கும், தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காணவும் இந்த ஏற்பாடு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர இரு ரயில் நிலையங்களிலும் அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. 24 மணி நேர கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.