மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் - ஹோட்டல்களுக்குள் நீர் புகுந்தது
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று திடீரென்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் சீறிப் பாய்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுனாமியைத் தொடர்ந்து தமிழக கடல்களில் அடிக்கடி சீற்றம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்திலும் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று கடலில் சீற்றம் ஏற்பட்டது. வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகமாகவே சீற்றம் இருந்தது. கடற்கரை கோவிலுக்கு அருகில் உள்ள மீனவர் குப்பத்தில் 100 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
10 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி பயங்கர இரைச்சலுடன் கரையை மோதி உடைத்தன. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் படகுகள், வலைகள், துடுப்புகள் உள்பட மீன்பிடி சாதனங்கள் தூக்கி அடித்து வீசப்பட்டன.
இதனால் அங்கிருந்த ஹோட்டல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. கடற்கரை ஹோட்டல்களின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் அங்கிருந்தவர்கள் தலை தெறிக்க ஓடினர்.
பல்லவர்களின் புகழை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் கடற்கரை கோவிலை சுற்றி ராட்சத பாறாங்கற்களை போட்டு கடல் நீர் புகாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பாக உள்ள பகுதி என்ற போதிலும் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் வெளியேறிவிட்டனர்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடலில் அலையின் வேகம் அதிகமாக இருப்பது வழக்கம். நேற்று சந்திர கிரகணம் என்பதால் சீற்றம் அதிகமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications