இந்தாண்டு இறுதிக்குள் தேர்தல் வந்து விடும்: வைகோ
சென்னை: லோக்சபாவுக்கு இந்தாண்டு இறுதிக்குள் இடைத் தேர்தல் வந்து விடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்திாயளர்களை வைகோ சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஐந்தாண்டு பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய இயலாது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வந்து விடும்.
இடதுசாரிகள் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றவுடன், ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் அரசு குதிரை பேரத்தில் இறங்கி விட்டது. இதற்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் அளித்த வாக்குறுதியே சரியான உதாரணம்.
மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.
அதேபோல தமிழகத்திலும், பாமக கூட்டணியை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் திமுக அரசின் நிலை ஆட்டம் கண்டுள்ளது. இடதுசாரிகளும் ஆதரவை திரும்பப் பெறப் போவதாக கூறுகின்றனர். கம்யூனிஸ்டுகளும் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டால் திமுக அரசு சிறுபான்மை அரசாகி விடும். முழுக்க முழுக்க காங்கிரஸை நம்பியிருக்க வேண்டிய நிலைய ஏற்படும். அப்போது அவர்கள் கேட்கும் அமைச்சர் பதவியை தந்தே ஆக வேண்டும். இந்தப் பின்னணியில் திமுக அரசால் நீண்ட காலத்திற்கு ஆட்சியில் நீடிக்க முடியாது.
மத்திய அரசு மற்றும் திமுக அரசின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியும், விரக்தியும் அடைந்துள்லனர்.
வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்லும். திமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் மக்களுக்கு அரசு மீது வெறுப்பு வந்து விட்டது.
இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிக்கு அதிமுக தயார் என்று கூறியிருக்கிறார். தேர்தல் சமயத்தில் தேர்தல் கூட்டணி முடிவு செய்யப்படும்.
மதிமுகவைப் பொருத்தவரை நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். வரும் லோச்கபா தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்துதான் சந்திக்கப் போகிறோம்.
மதிமுக அவைத்தலைவராக கண்ணப்பனும், பொருளாளராக மாசிலாமணியும், துணைப் பொதுச் செயலாளராக துரை பாலகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications