கருணாநிதியை வரலாறு மன்னிக்காது-ராமதாஸ்
திருச்சி: மதுக் கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
திருச்சியில் பாமக மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் ராமதாஸ் பேசியதாவது:
மது ஒழிப்பு தொடர்பாக இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரசை எட்ட வேண்டும். அதற்கு பெண்கள் இந்த தீர்மானங்களை வீட்டில், தெருவில், குழாயடிகளில் கூடிப் பேச வேண்டும். அப்போதுதான் குடும்பங்களை சீரழிக்கும் இந்த மதுவை ஒழிக்க முடியும்.
மதுவை ஒழிக்க கடந்த 20 ஆண்டுகளாக போராடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதனால் பெண்களை திரட்டி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. குடிபழக்கம் ஒரு கொடிய நோய். வீட்டை கெடுக்கும், சமுதாயத்தை பாதிக்கும் இந்த கொடிய நோயை ஒழிக்க வேண்டும்.
மலேரியா, காசநோய் போன்ற பல கொடிய நோய்களை ஒழிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து, செலவு செய்தாலும், ஒரு புதிய கொடிய நோயை உற்பத்தி செய்கிறது. அதனால் மரணம் ஏற்படுகிறது. அதனால்தான் மது வியாபாரத்தை மரண வியாபாரம் என்று கூறினேன். மக்கள் நலன் காக்கும் இந்த அரசு மது வியாபாரத்தை தவிர்க்க வேண்டும்.
மது வியாபாரத்தில் அரசு இலக்கு வைத்து விற்பனை செய்கிறது. ஊத்திக் கொடுக்கும் வேலைகளை பட்டதாரிகளை நியமித்திருப்பது கொடுமையானது. வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, குடிநீர், மின் உற்பத்தி போன்றவற்றுக்குத்தான் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இந்த அரசு குடிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று உலக சுகாதார பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தில் பெரியார், ராஜாஜி, அண்ணா, ஓமந்தூரார் உள்பட பல தலைவர்கள் மது ஒழிப்புக்காக பாடுபட்டுள்ளனர். யார் சொல்லியும் கடந்த நான்கு ஐந்து தலைமுறைகளாக கேட்கவில்லை.
குடிப்பழக்கத்தில் இருந்து இளைஞர்களை காக்க இந்த அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. கடுமையான சட்டம் கொண்டுவந்து மதுக்கடை இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்குவோம். இதற்கான ஆலோசனையையும், ஒத்துழைப்பையும் நாங்கள் அளிக்கிறோம். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 34 ஆண்டுகளாக மது விலக்கு அமலில் இருந்தது. மதுக்கடைகளை மூடவில்லை என்றால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது. இளைய சமுதாயத்தினரும் மதுவால் சீரழிவதாக இங்கு பெண்கள் கூறியுள்ளனர். இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல வேண்டும்.
உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மதுக்கடைகளை மூட கருணாநிதி முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கருணாநிதியை வரலாறு மன்னிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications