சேது மாற்றுப் பாதை: டெல்லி அதிகாரிகள் ரகசிய ஆய்வு

தனுஷ்கோடி கடலில் அமைந்துள்ள ராமர் பால மணல் திட்டுகளை சேதப்படுத்தாமல், சேது சமுத்திரத் திட்ட கால்வாய் தோண்டுவது குறித்து ஆய்வு செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாற்று வழியை தேர்வு செய்ய ஆய்வு நடத்தும்படி சேது சமுத்திர திட்ட கழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தமிழக அரசு வழங்கிய 2,500 ஏக்கர் நிலத்தை சர்வே செய்யும் பணியில் வருவாய் மற்றும் நில அளவீட்டுத் துறையினர் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டுள்ளனர். சர்வே அடையாளமாக அப்பகுதியில் கொடிகளையும் நட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் சர்மா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் இருந்து மண்டபத்துக்கு திடீரென்று வந்தனர். அங்கிருந்து கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பலில் சென்று கோதண்டராமர் கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளை ஆய்வு பார்வையிட்டனர்.
சேது கால்வாய் தோண்டுவதற்கு மாற்றுப் பாதையான நான்காவது வழித்தடம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். பின்னர் தனுஷ்கோடி கடலில் ராமர் பால மணல் திட்டு பகுதிகளையும் பார்வையிட்டனர்.
ரகசியமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டக் கழக பொது மேலாளர் சீனிவாசக்கண்ணன், ராமநாதபுரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் உள்பட தமிழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications