மோனிகா தேவிக்கு ஆதரவாக மணிப்பூரில் பந்த்
இம்பால்: பளு தூக்கும் வீராங்கனைக்கு எதிராக ஊக்க மருந்து சதி நடந்ததைக் கண்டித்து அவர் சார்ந்த மணிப்பூர் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது.
பளு தூக்கும் வீராங்கனை மோனிகா தேவி, ஒலிம்பிக் போட்டிக்குக் கிளம்ப சில மணி நேரங்களே இருந்த நிலையில் அவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக கூறி ஒலிம்பிக்குச் செல்ல இந்திய விளையாட்டு ஆணையம் தடை விதித்தது. இது பெரும் சர்ச்சையைக்கிளப்பியது.
பின்னர் மோனிகா மீது எந்தத் தவறும் இல்லை என்று விளையாட்டு ஆணையம் அறிவித்தது. ஆனால் அவகாசம் முடிந்து விட்டதால் மோனிகாவால் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல முடியவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மணிப்பூர் முதல்வர் இபோபி சிங் கோரிக்கை விடுத்தார். மோனிகா தேவிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்த போராட்டக் குழுவும் மணிப்பூரில் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் மோனிகா விவகாரத்தில் அநியாயம் நடந்து விட்டதாக கூறி இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி இன்று காலை மணிப்பூரில் பந்த் தொடங்கியது. பந்த் காரணமாக தலைநகர் இம்பால் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான். பந்த் முழு அளவில் இருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications