முஷாரப் ராஜினாமா: பாக். உள்நாட்டு விவகாரம்-இந்தியா
பெர்ஹாம்பூர் (மேற்கு வங்கம்): பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் ராஜினாமா செய்துள்ளது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதில் இந்தியா கருத்து சொல்ல ஏதும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூருக்கு வந்த பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், இது பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரம். இதில் நாம் கருத்து சொல்ல ஏதும் இல்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான சில பணிகள், எனது சமீபத்திய பாகிஸ்தான் பயணத்தின்போது தொடங்கப்பட்டது. விரைவில் இரு நாட்டு வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும்.
எனது பாகிஸ்தான் பயணத்தின்போது, நவாஸ் ஷெரீப் முதல் ஆசிப் அலி சர்தாரி வரை மற்றும் பிரதமர் யூசுப் ரஸா கிலானி வரை சுமூக உறவை உறுதிப்படுத்த முடிந்தது. அனைவருடனும் நான் இதயப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினேன். அனைத்தும் சாதகமான கோணத்தில் செல்வதாகவே நான் நினைக்கிறேன்.
கடந்த ஆண்டு நான் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தபோது, நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து எனக்கு போன் செய்து நலம் விசாரித்தார் என்றார் பிரணாப் முகர்ஜி.
முஷாரப்புக்கு புஷ் பாராட்டு:
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், முஷாரப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் உறுதியுடனும், உறுதுணையாகவும் இருந்தார் என்று முஷாரப்பை புஷ் பாராட்டியுள்ளார். அதேசமயம் பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் புஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கார்டான் ஜோன்டிரோ கூறுகையில், பாகிஸ்தான் ஜனநாயக சக்தியாக மாற உதவியவர் முஷாரப். அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத குழுக்களை எதிர்த்து உறுதியுடன் போராடினார்.
பாகிஸ்தானின் புதிய அதிபருடனும், பாகிஸ்தான் அரசுடனும் இணைந்து பொருளாதார, அரசியல், பாதுகாப்பு சவால்களை சந்திக்க அமெரிக்கா ஒத்துழைத்து செயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications