ஒகேனக்கல்: கூட்டு சர்வே பேச்சுக்கே இடமில்லை-துரைமுருகன்
டெல்லி: கர்நாடகத்துடன் கூட்டு சர்வே என்ற பேச்சுக்கே இடமில்லை. திட்டமிட்டபடி ஒகேனக்கல் திட்டம் நிறைவேறும் என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் தெரிவித்தார்.
டெல்லி சென்றுள்ள துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒகேனக்கல் திட்டம் தொடர்பாக கூட்டு சர்வே நடத்த வேண்டும், முதல்வர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியதாக அம்மாநிலத்தில் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ எங்களுக்க எந்த தகவலும் வரவில்லை.
இத்திட்டத்தில் தமிழக அரசின் நிலை தெளிவாக உள்ளது. திட்டமிட்டபடி, குறிப்பிடப்பட்ட காலத்தில் இத்திட்டம் முடிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய முடியாது. கூட்டு சர்வே என்ற பேச்சுக்கே இடமில்லை.
அண்டை மாநிலங்களுடன் சுமூக உறவு வைத்துக் கொள்ளவவே தமிழகத்தின் நிலைப்பாடு. கர்நாடக தலைவர்களின் அறிக்கைகளுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. தனிநபர் மற்றும் தலைவர்களின் அறிக்கைகளுக்கு பதில் கூறினால் இருமாநிலங்களுக்கும் இடையே மோதல்தான் உருவாகும்.
பிரச்னைகளை அவர்கள் சரியான முறையில் கொண்டு வரட்டும். அப்போது தமிழக அரசு அதற்கான உரிய பதிலை தரும். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. அதன்படி ஒகேனக்கல் தமிழகத்துக்கு உட்பட்ட பகுதி.
அதேபோல முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டும் கேரள அரசின் செயலை அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications