சிறுமி பலாத்காரம்: கட்டப் பஞ்சாயத்து செய்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
நெல்லை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் கட்டப் பஞ்சாயத்து செய்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகள் சுந்தரி, ஒன்பதாம் வகுப்பு மாணவி. இவர்களது உறவினர் செல்வன். மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். உறவினர் என்பதால் செல்வத்தின் வீட்டிற்கு சுந்தரி சென்று வருவார்.
கடந்த 7 மாதங்களுக்கு முன் நாங்குநேரியில் ஒரு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சுப்ரமணியும் அவரது மனைவியும் சென்றனர். சுந்தரி வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்து செல்வன், சுந்தரியை மிரட்டி பலத்காரம் செய்தார். பயந்துபோன சுந்தரி இதுகுறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட செல்வன், கொலை செய்து விடுவதாக சுந்தரியை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தார்.
இதனால் சுந்தரி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சுந்தரியிடம் விசாரித்தனர். பின்னர் செல்வத்திடம் சுந்தரியின் பெற்றோர் தகராறு செய்தனர். சுந்தரியை தனியார் மருத்துவமனையில் சேர்த்து கர்ப்பத்தை கலைத்தார் செல்வன்.
இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸில் சுந்தரியும் சுப்பிரமணியனும் புகார் செய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் பிச்சி லாசர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாமல், இருதரப்பினரையும் சாமாதானமாக போகுமாறு கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நெல்லை டிஐஜி கண்ணப்பனிடம் சுந்தரியும், சுப்ரமணியனும் புகார் செய்தனர். அதில், இருதரப்பையும் சமரசம் செய்து கொள்ளும்படி இன்ஸ்பெக்டர் பிச்சி லாச கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். இதுவரை வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. செல்வனிடம் இருந்து ரூ.50,000க்கான செக்கை வாங்கி எங்களிடம் கொடுத்து புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி மிரட்டுகிறார். அவரது மிரட்டலுக்கு பயந்து செக்கை வாங்கிக் கொண்டோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்யுமாறு ஏடிஎஸ்பி மாணிக்கராவ், மாவட்ட குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி ஆகியோருக்கு டிஐஜி கண்ணப்பன் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி 10 நாட்களுக்கு முன் செல்வன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு கருகலைப்பு செய்த டாக்டர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சிறுமி பலத்கார புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் கட்டப் பஞ்சாயத்து செய்த இன்ஸ்பெக்டர் பிச்சி லாசரை சஸ்பெண்ட் செய்து நெல்லை டிஐஜி கண்ணப்பன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications