டாக்டர் அலட்சியம்- பச்சிளங் குழந்தை பரிதாப சாவு
நாகர்கோவில்: சிகிச்சை அளிக்க டாக்டர்கள் வராததால் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. மூன்றாவது பிரசவத்திற்காக அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஜயலட்சுமி சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து சில மணி நேரம் ஆன நிலையில் குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இரவு நேரம் என்பதால் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை.
இதையடுத்து டாக்டரை வரவழைக்கும்படி அன்பழகனும் அவரது உறவினர்களும் மருத்துமனை ஊழியர்களை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் டாக்டர் வர மறுத்துவிட்டாதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள் டாக்டரை கண்டித்து, குழந்தையின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர். பணியில் கவனக்குறைவாக இருந்த அந்த டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications