போலீஸாரின் திறமைக் குறைவால் ஏற்பட்ட வன்முறை: திருமா.

சென்னையில் கடந்த 17ம் தேதி நடந்த தொல். திருமாவளவன் 47வது பிறந்த நாள் கொண்டாட்ட பொதுக் கூட்டத்திற்கு பல பகுதிகளிலிருந்தும் கட்சித் தொண்டர்கள் வாகனங்களில் வந்தனர்.
அப்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில், கல்பாக்கம் அருகே புதுப்பட்டணம் என்ற இடத்தில் வந்த விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள், அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் சென்றனர். இதையடுத்து அவர்களுக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் பின்னர் கலவரமாக மாறியது. கிராம மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் பெரும் அடிதடி நடந்தது. இந்த மோதலில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த நிலையில் போலீஸார் துரித கதியில் செயல்படாமல், மெத்தனமாகவும், திறமைக்குறைவாகவும் இருந்ததால்தான் சாதாரண மோதல் கலவரமாக மாறி விட்டது என்று தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அந்த ஹோட்டலில் ஏற்பட்டது சாதாரண வாய்த் தகராறுதான். அது கலவரமாக மாற போலீஸார் முறையற்ற வகையிலும், திறமைக் குறைவாகவும் செயல்பட்டதுதான்.
ஸ்பாட் முடிவு எடுப்பதில் போலீஸார் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் இருந்து விட்டனர். சரியான முடிவை எடுத்து துரித கதியில் அவர்கள் செயல்பட்டிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை போயிருக்காது.
ஆனால் அங்கிருந்த போலீஸார் சரியான முடிவினை எடுக்காமல் திணறியதே பிரச்சினை கை மீறிப் போனதற்கு காரணம். இந்த விஷயத்தில் நான் அரசை குறை கூற விரும்பவில்லை.
முஸ்லீம்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கும் இதுவரை எங்குமே மோதல் நடந்ததாக வரலாறு இல்லை. ஆனால் பிரச்சினை வெடித்ததும், விடுதலைச் சிறுத்தை கட்சித் தொண்டர்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களையும் வேறு பாதையில் திருப்பி விட்டிருந்தால் இந்த வன்முறையைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் போக்குவரத்தைத் திருப்பி விடாமல், விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களை மட்டும் திரும்பிப் போகுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
போலீஸாரே 50 முதல் 60 வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் 50 விடுதலைச் சிறுத்தை தொண்டர்களையும் அவர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
இந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது, வருத்தத்திற்குரியது. ஆனால் இது பொதுவான வன்முறை அல்ல, அந்த இடத்தில் ஏற்பட்ட கோபத்தில் நடந்து விட்ட ஒன்று.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் நானும், முஸ்லீம் தலைவர்களும் பார்த்துக் கொள்வோம்.
தலித் - முஸ்லீம் ஒற்றுமையை விரும்பாத சில சமூக விரோதிகள் இரு தரப்பினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயலுகின்றனர். ஆனால் அது நடக்காது.
முஸ்லீம்களுக்கும், தலித் மக்களுக்கும் இடையே பாரம்பரிய சகோதர உறவு நிலவுகிறது. ஆனால் சென்னை அருகே நடந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து திருச்சி,மதுரை, தஞ்சையில் உள்ள முஸ்லீம் சமூகத்தினரின் கடைகளையும், ஹோட்டல்களையும் போலீஸார் ஏன் மூடுமாறு வலியுறுத்தினார்கள் என்று தெரியவில்லை. சென்னையில் உள்ள முஸ்லீம்களின் கடைகள், ஹோட்டல்களை அவர்கள் மூடச் சொல்லியிருந்தால் கூட நியாயமாக இருந்திருக்கும்.
ஆனால் தேவையே இல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள கடைகள், ஹோட்டல்களை ஏன் போலீஸார் மூடச் சொன்னார்கள் என்று புரியவில்லை.
வன்முறையில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நானும், முஸ்லீம் தலைவர்களும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இதுகுறித்து விவரிப்போம். புதுப்பட்டணத்திற்கும் நாங்கள் செல்லவுள்ளோம்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை விடுதலைச் சிறுத்ைதகள் கட்சியினர் உள்பட 38 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால்
வன்முறைச் சம்பவத்தை தடுத்து நிறுத்த முயன்ற கட்சியினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றார் திருமாவளவன்.
திருமாவளவன் பேட்டி அளித்தபோது முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களும் உடன் இருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மோதலில் ஈடுபட்ட ஹோட்டலின் உரிமையாளர்கள் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications