வக்கீல்கள் - லாரி அதிபர்கள் மோதல் -நூதன போராட்டம்
பழனி: பழனியில் வழக்கறிஞர்களுக்கும் லாரி அதிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர்களுக்கு சாதகமாக போலீஸார் செயல்படுவதாக கூறி பஸ் நிலையத்தில் லாரிகளை நிறுத்தி லாரி அதிபர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கோட்டைக்கார தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில்குமார். சில தினங்களுக்கு முன்பு தனது மோட்டார் பைக்கில் ரோட்டை கடக்க முயன்றபோது பின்னால் வந்த லாரி அதிபர் ராஜன் என்பவருக்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இதனால் ராஜன் மீது செந்தில்குமார் போலீஸில் புகார் செய்தார். ராஜன் தலைமறைவானார். இந்நிலையில் தனது கணவர் ராஜனை காணவில்லை. அதற்கு வழக்கறிஞர் செந்தில்குமார்தான் காரணம் என்று ராஜனின் மனைவி ராஜாத்தி போலீஸில் புகார் செய்தார்.
புகாரை ஏற்கக் கூடாது என்று கூறி செந்தில்குமார் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து லாரி அதிபர்கள் ராஜன், ராமகிருஷ்ணன் மற்றும் குருபரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், போலீசார் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து பழனி பஸ் நிலைய நுழைவு வாயில் மற்றும் பஸ் வெளியே செல்லும் வழியில் லாரிகளை நிறுத்தி போக்குவரத்தை மறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்டிஓவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications