சுய சரிதை எழுதும் மாஜி அரசர் ஞானேந்திரா!
காத்மாண்டு: நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா தனது சுய சரிதையை எழுதத் தொடங்கியுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் 240 ஆண்டுகால மன்னர் ஆட்சி கடந்த மே 28ம் தேதி முடிவுக்கு வந்தது. தொடர் கிளர்ச்சியும் போராட்டமும் மன்னரின் மணிமுடியையும், சிம்மாசனத்தையும் ஆட்டம் காண வைத்தன. நேபாளத்தின் கடைசி மன்னராக ஞானேந்திரா இருந்தார்.
மாவோயிஸ்ட் கட்சி தலைமையில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. அரண்மனையில் இருந்து ஞானேந்திரா வெளியேற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார். இதையடுத்து நாராயண்ஹிதி அரண்மனையில் இருந்து கடந்த ஜூன் மாதம் ஞானேந்திரா குடும்பத்துடன் வெளியேறினார்.
இதையடுத்து அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. தற்போது பிரசந்தா தலைமையில் அங்கு ஆட்சி நடந்து வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்பரன் யாதவ் ஜனாதிபதியாகி உள்ளார்.
தற்போது நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள நாகார்ஜூன் அரண்மனையில் வசித்து வருகிறார் ஞானேந்திரா. அரண்மனையில் இருந்தபடி தனது சுய சரித்திரத்தை எழுதத் தொடங்கியுள்ளார் அவர். சுய சரிதத்தை 5 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளார். குழந்தை பருவம், மன்னர் மகேந்திரா அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பு வகித்த காலம், மன்னராக வலம் வந்தது, மன்னராட்சி கவிழ்ந்தது, முடிவாக கருத்துகளும், குறிப்புகளுமாக 5 பாகங்கள் உருவாக உள்ளன.
இதற்காக தினமும் நேரம் செலவிட்டு அவர் எழுதி வருகிறார். தனது கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் சுய சரிதத்தை எழுதி வருகிறார். இதற்காக நிறைய புத்தகங்களை அவர் படித்து வருகிறார். நேபாள வரலாறு, அதில் முக்கியமாக ராணாவின் காலம் குறித்த புத்தகங்களை படித்து வருகிறார். தற்போது நாட்டின் நடப்புகளை மிகவும் உன்னிப்பாக அவர் கவனித்து வருகிறார். அதற்காக தொலைகாட்சியையும் தொடர்ந்து பார்த்து வருகிறார் என்று அந்நாட்டு வார இதழ் தருன் வெர்னாகுலர் தெரிவிக்கிறது.
காலை மற்றும் மாலையில் வாக்கிங் செல்லும்போது அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் வாழ்க்கை முறையை விசாரிக்கிறார். "உங்களின் குடும்பத்தினர் எங்கு உள்ளனர்? ஏதாவது பிரச்சனை உள்ளதா? குழந்தைகளை கண்டிப்பாக படிக்க வையுங்கள்" என்று அவர்களிடம் ஞானேந்திரா கூறுவதாக அந்த வார இதழ் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications