சிறை நிரப்பும் போராட்டம்-ஜம்முவில் 2 லட்சம் பேர் கைது
ஜம்மு: அமர்நாத் தேவஸ்தானத்திற்குக் கொடுத்த நிலத்தை திரும்பப் பெற்றதை ரத்து செய்யக் கோரி இன்று ஜம்முவில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட 2 லட்சம் பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
ஸ்ரீ அமர்நாத் யாத்திரை சங்கர்ஷ சமிதி சார்பில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு, சம்பா, உதம்பூர், கிஷ்த்வார் மாவட்டங்களில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் பெரும் திரளான போராட்டக்காரர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதுவரை ஜம்மு பிராந்தியத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் 3.5 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமர்நாத் சங்கர்ஷ சமிதி கூறியுள்ளது. ஆனால் 2 லட்சம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது என்று சமிதி ஒருங்கிணைப்பாளர் லீலா கரன் சர்மா தெரிவித்துள்ளார். மத்திய அரசு முடிவு கட்டாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் எனவும் அது கூறியுள்ளது.
காஷ்மீரில் எம்.கே.நாராயணன்:
இந் நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் மத்திய உளவுப் பிரிவின் இயக்குனர் பி.சி.ஹல்தார் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை, கலவரம் தொடர்பான சம்பவங்கள் குறித்து ஆளுநர் என்.என்.ஹோரா, உயர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதகளை சந்தித்து கேட்டறிகிறார்.
பின்னர் டெல்லி திரும்பும் நாராயணன் விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்பிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications