சென்னையில் கனத்த மழை-இன்னும் பெய்யும் என அறிவிப்பு
சென்னை: சென்னை நகரிலும் அதன் புறநகர்களிலும் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிக பலத்த மழை பெய்தது. இடியும், மின்னலும் வெளுத்துக் கட்டியது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாகின.
தென் மேற்குப் பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மறுபடியும் மழை பெய்து வருகிறது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வாக்கில் திடீரென பலத்த மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த கன மழை பெய்தது. இத்தோடு இடியும், மின்னலும் வான வேடிக்கை காட்டின. பலத்த காற்றும் வீசியது.
இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் பல வெள்ள நீரில் தத்தளித்தன. பல பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.
நகர் மட்டுமல்லாது புறநகர்ப் பகுதிகள் பலவற்றையும் மழை விளாசித் தள்ளியது.
நேற்று இரவு மட்டும் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் 24 மணி நேரத்திற்குள் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்யும். பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications