ஸ்டிரைக்: அரசு பஸ்கள் ஓடும்- அமைச்சர் நேரு
சென்னை: இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்துள்ள போதிலும், அரசு பேருந்துகள் வழக்கம் போல ஓடும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடதுசாரி தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தார்மீக ஆதரவு அளிக்கிறது.
இருப்பினும் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள். அரசு பேருந்துகள் வழக்கம் போல ஓடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆதரவு உண்டு-பங்கேற்பில்லை: தொமுச
வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரவையின் தலைவர் குப்புசாமி எம்பி வெளியிட்டு அறிக்கையில், வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கைகளுக்கு தொமுச ஆதரவு உண்டு. ஆனால் பேரவை இணைப்பு சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல ரயில்வே தொழிற்சங்கமான எஸ்ஆர்எம்யூ பொது செயலாளர் கண்ணையா கூறுகையில், சம்பள கமிஷன் முரண்பாடுகள் குறித்து 26ம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
இதனால் பொது மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். எனவே 14 லட்சம் உறுப்பினர்களை கொண்ட எஸ்ஆர்எம்யூ இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது. தமிழகத்தில் அனைத்து ரயில்களும் ஓடும் என்றார்.
இதேபோல அகில இந்திய எஸ்சி, எஸ்டி ரயில்வே தொழிற்சங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துள்ளன.
பலத்த பாதுகாப்பு:
சென்னையில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் சேகர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இடதுசாரி தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பால், குடிதண்ணீர், செய்தித்தாள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சென்னை முழுவதும் ரெயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் கண்காணிப்புடன் பஸ்கள் இயக்கப்படும். பஸ் டிப்போக்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இரவு நேர வாகன சோதனையும், தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பஸ் மற்றும் ரயில் மறியலில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று அவர் எச்சரித்தார்.