பாகிஸ்தானை விட்டு போக மாட்டேன்-முஷாரப்
இஸ்லாமாபாத்: வேறு நாட்டில் செட்டிலாகப் போவதாக வந்த தகவல்களை பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாகிஸ்தானை விட்டு வெளியேறும் எண்ணம் தனக்கில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் பதவியை நேற்று முன்தினம் முஷாரப் ராஜினாமா செய்தார். முன்னதாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி, ரேடியோ மூலம் உருக்கமாக உரையாற்றினார். நாட்டுக்காகவே ராஜினாமா முடிவைத் எடுத்ததாக அவர் கூறியிருந்தார்.
பதவியை துறந்த நிலையில் அவர் சவூதி அரேபியாவில் செட்டிலாகலாம் அல்லது மகனுடைய பிசினஸூக்கு உதவியாக அமெரிக்காவில் செட்டிலாகலாம் என்று செய்திகள் வெளியாகின. லண்டனில் குடியேற உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் தனது குடும்பத்தினருடன் மெக்காவுக்கு அவர் புனிதப் பயணம் செல்லவுள்ளதாகவும் பின்னர் பாகிஸ்தானுக்கு வெளியே எங்கு வசிப்பது என்பது குறித்து முடிவெடுப்பார் என்றும் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் இந்த யூக தகவல்களுக்கு பதிலளித்துள்ளார் முஷாரப். பாகிஸ்தானை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் மற்றும் இந்நாட்டு மக்களுக்காகவே ராஜினாமா முடிவே நான் எடுத்தேன். ராஜினாமா என்பது என்னுடயை தோல்வியல்ல.
அமெரிக்கா, லண்டன், சவுதி நாடுகளில் செட்டிலாவது, மெக்கா புனித பயணம் போன்ற தகவல்கள் ஆதாரமற்றவை. பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் நோக்கம் இல்லை. இந்த நாடுதான் என்னுடைய முதல் நேசத்திற்கு உரியது என்று திட்டவட்டமாக கூறி யூக தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.