பிச்சைக்காரர்கள்: கோவா அமைச்சருக்கு பீகார் முதல்வர் கண்டனம்
பாட்னா: பாட்னாவில் இருந்து கோவாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பிறகு பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக கோவா அமைச்சர் ரவிநாயக் கூறியதற்கு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவாவில் பிச்சைக்காரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக்,
கோவாவிற்கு, பிற மாநிலங்களில் இருந்துதான் பிச்சைகாரர்கள் வருகின்றனர். குறிப்பாக பாட்னாவில் இருந்து, கோவாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்துத் தொடங்கிய பிறகு அதிக எண்ணிக்கையில் பிச்சைக்காரர்கள் வருகின்றனர் என்று கூறினார்.
ரவிநாயக்கின் இந்த பேச்சு பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பீகார் மாநில முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவா அமைச்சர் ரவிநாயக்கின் பேச்சு பீகார் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
முக்கிய பதவியில் உள்ள அமைச்சர் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது, வருத்தத்திற்குரியது. உடனடியாக அவர் பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பீகாரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல.
தங்களின் திறமையாலும், கடும் உழைப்பாலும், தாங்கள் செல்லும் மாநிலத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர். ரவிநாயக்கின் பேச்சு குறித்து அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications