ஓகேனக்கல்: சுப்ரீம் கோர்ட் செல்வோம்-கர்நாடகம் மிரட்டல்
சென்னை: ஓகேனக்கல் குடிநீர் திட்டம் தொடர்பாக, கர்நாடகம் மற்றும் தமிழகத்துக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையில் தலையிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
கர்நாடக முதல்வரான பின் முதன்முறையாக அவர் நேற்று சென்னை வந்தார். அமெரிக்கா செல்ல விசா தொடர்பாக அமெரிக்க தூதரகத்துக்கு வந்த அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
ஓகேனக்கல் விவகாரத்தில் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சுமூகத் தீர்வு காண உதவ வேண்டும். அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு வேண்டும் என்றே கர்நாடகம் விரும்புகிறது என்றார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு-கர்நாடகம் மிரட்டல்:
இதற்கிடையே ஓகேனக்கல் விவகாரத்தில் அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கைகள் தோல்வியடையும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என கர்நாடக பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மிரட்டியுள்ளார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஓகேனக்கல் விஷயத்தில் கூட்டு சர்வே நடத்துவது, குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீரை பகிர்ந்து கொள்வது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு தமிழக அரசுக்கு அவகாசம் கொடுத்திருந்தோம்.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டு சர்வே எல்லாம் நடத்த முடியாது என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு அமைதி காத்து வருவது கவலை அளிக்கிறது.
இதனால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும். தமிழக அரசு ஒத்துழைக்கவில்லையெனில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு பிரதமரை சந்தித்து, இது பற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்.
கூட்டு சர்வே நடத்தும் வரை தமிழக அரசு ஓகேனக்கல் திட்டத்தை துவங்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications