பாளை சிறையில் செல்போன்-3 வார்டன்கள் மாற்றம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறை வார்டன்கள் மூன்று பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் கைதிகளுக்கு செல்போன், சிம்கார்டு, போதை பொருட்கள் சட்டவிரோதமாக சப்ளை செய்யப்படுகின்றன. இதையடுத்து சிறைகளில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது.
பாளை மத்திய சிறையிலும் கைதிகளிடம் செல்போன், சிம்கார்டு மற்றும் கஞ்சா போன்றவை தாரளாமாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். பாளை சிறையில் கைதி, பெருமாள்புரத்தை சேர்ந்த கோழிஅருள் என்பவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த செல்போனில் இருந்து அவர் நெல்லை மற்றும் மதுரையிலுள்ள முக்கிய ரவுடிகளிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கோழி அருளிடம் சிறையில் செல்போன் கிடைத்தது எப்படி என்றும் ரவுடிகளிடம் பேசுவதற்கு உதவியவர்கள் யார் என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறை வார்டன்கள் சுப்பிரமணியன், பரவசிவன், தலைமை வார்டன் வேலுச்சாமி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் பாளை சிறையில் 2வது பிளாக்கில் உள்ள சாக்கடை அடியில் பாலிதின் பையில் சுற்றப்பட்டு ஒரு பொட்டலம் கிடந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. சிறை கைதிகளுக்கு வார்டன்கள் உதவியுடன் கஞ்சா சப்ளை செய்யப்பட்டு வருவதாக ஏற்கனவே புகார் வந்துள்ள நிலையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications