டிசம்பர் முதல் சென்னை-திருச்சி மின்சார ரயில்
சென்னை: சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் மாதத்திலிருந்து மின்சாரத்தில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் வேலு தெரிவித்தார்.
தெற்கு ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டு பணிகள், மேலும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பிறகு ரயில்வே இணையமைச்சர் வேலு கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மீட்டர் கேஜ் பாதைகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அகல ரயில் பாதையாக மாற்றப்படும். இந்த ஆண்டு 720 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்படும். ரூ.822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விழுப்புரம்-திண்டுக்கல் இடையே 223 கி.மீ. தூரம் இரண்டாவது புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டிலேயே இப்பணி தொடங்கப்படும். விழுப்புரம்-அரியலூர் இடையே ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ளது. அரியலூர்-திருச்சி இடையே பணி நடந்து வருகிறது. இப்பணி முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்திலிருந்து சென்னை எழும்பூர்-திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் மின்சாரத்தில் இயக்கப்படும்.
வரும் ஆண்டு திருச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில் இடையே மின்மயமாக்கப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. திண்டுகல்-கரூர்-சேலம், விழுப்புரம்-வேலூர், கோவை-மேட்டுப்பாளையம் இடையிலும் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மூலம் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்த ஒரு வாரத்தில் இப்பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கப்படும்.
திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே மூன்று ஜோடி பாசஞ்சர் ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்படும். திருநெல்வேலி வழியாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்ய ஏதுவாக இந்த பாசஞ்சர் ரயில்களின் நேரம் அமைக்கப்படும்.
திண்டுக்கல்-மதுரை இடையே இரண்டாவது பாதை, திருவாரூர்-நாகூர் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வுக்கு காத்திருக்கிறது.
திருவாரூர்-பட்டுக்கோட்டை- பேராவூரணி- காரைக்குடி இடையே 148 கி.மீ. மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணி துவங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications