மனைவி-மகளை கொன்ற ஆட்டோ டிரைவர்
சிதம்பரம்: மனைவி, மகளை கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரத்தையடுத்த காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (40). இவரது மனைவி தெய்வ நாயகி (32). இவர்கது மகள் சங்கர கார்த்திகா (9).
கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தெய்வநாயகி காரைக்குடியில் உள்ள தனது மாமாவின் வீட்டில் வசித்து வந்தார். கார்த்திகா திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
2 நாட்களுக்கு முன் இந்தத் தம்பதியை உறவினர்கள் ஒன்று சேர்த்து வைத்தனர். ஆனால், வீட்டுக்குத் திரும்பிய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார் முருகன்.
இதையடுத்து கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முருகன் தூங்கிக் கொண்டிருந்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, மனைவியை கத்தியால் குத்திக் கொன்றார்.
பின்னர் காட்டுமன்னார் கோயில் போலீசுக்கு போன் செய்து மனைவியையும், மகளையும் கொலை செய்து விட்டதாக தகவல் தந்தார். விரைந்து வந்த போலீசார் அவரைக் கைது செய்து உடல்களை கைப்பற்றினர்.