சேது மாற்றுப் பாதை-நிபுணர்கள் குழு விவாதம்
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
சேது சமுத்திர திட்டத்தை தற்போதுள்ள பாதையில் நிறைவேற்றினால் ராமர் பாலம் சேதம் அடையும் என்றும், எனவே இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இந்து அமைப்புகள், ஜெயலலிதா, சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமர் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய வழித்தடத்தில் சேது சமுத்திர திட்டத்தை மேற்கொள்ளுமாறு கூறினர்.
இதைத்தொடர்ந்து, புதிய வழித்தடத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே.பச்சூரி தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுவின் முதலாவது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் நீரி' அமைப்பின் இயக்குனர் சக்கரபஸ்தி, தேசிய கடலியல் நிறுவனத்தின் இயக்குனர் செட்டி, கடலியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் கதிர் ஒளி,
இந்திய புவியியல் ஆய்வு துறையின் இயக்குனர் தேசாலி, தலைமை நீரியல் ஆய்வாளர் பி.ஆர்.ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுந்தரதேவன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார், சென்னை துறைமுகத் தலைவர் சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் சுந்தரதேவன் நிருபர்களிடம் பேசுகையில்,
சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மாற்று வழித்தடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது தொழில்நுட்ப ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் குழு வரும் செப்டம்பர் 3வது வாரத்தில் மீண்டும் கூடி விவாதிக்கும். மேலும் சேது சமுத்திர திட்ட பாதையை நேரில் சென்று ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
விரைவில் இந்தக் குழு இதற்காக தமிழகம் வரவுள்ளது.
சேது-அரசு வழக்கறிஞர் நெடுமாறன்:
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் நடந்த உண்ணாவிரதம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யத் தவறிய அரசு வழக்கறிஞர்கள் பிரகாசம், ஹரிஷ்குமார் ஆகியோரை முதல்வர் கருணாநிதி நீக்கினார்.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞராக பணியாற்றும் ஆர்.நெடுமாறன் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்குகளையும் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,
சுப்ரீம் கோர்ட்டில் சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான வழக்குகளை ஆர்.நெடுமாறன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். இது வரையில் இந்த வழக்கு விவகாரங்களை கவனித்து வந்த வக்கீல்கள் பிரகாசம், ஹரிஷ்குமார் ஆகியோர் சேது சமுத்திர வழக்கு சம்பந்தமான வழக்கு கட்டுகளை நெடுமாறனிடம் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.