போராட்டம்-டெல்லி செல்ல முயன்ற 'டிராபிக்' ராமசாமி கைது
சென்னை: டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்த கிளம்பிய டிராபிக் ராமசாமியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் டிராபிக் ராமசாமி. பொது நல வழக்குகள் தொடருவதில் புகழ் பெற்றவர். இவர் போட்ட வழக்கால்தான் கட்டாய ஹெல்மட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தனக்கு போலீஸார் அனுமதி மறுப்பதால் டெல்லிக்குப் போய் போராட்டம் நடத்த முடிவு செய்தார் டிராபிக் ராமசாமி. மேலும் சுப்ரீம் கோர்ட் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் அவர் தீர்மானித்தார்.
இதற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார் ராமசாமி. இதைத் தொடர்ந்து போலீஸார் நேற்று இரவு அவரது வீட்டுக்கு விரைந்து சென்று அவரை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர் அவரை கைது செய்தனர். அதன் பிறகு அவரை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கு ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.