3வது அணி: மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளுக்கு மாற்றாக பலம் வாய்ந்த 3வது அணியை அமைப்பது தொடர்பாக உ.பி. முதல்வர் மாயாவதியுடன், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள மாயாவதியின் இல்லத்தில் நேற்று இரவு சுமார் இரண்டரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்தும் சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கின்றன என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தையும் நாயுடு சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில், உ.பி. மாநிலத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சியே போட்டியிடும் என மாயாவதி அறிவித்தார். இதனால் 3வது அணிக்கான முயற்சியில் இறங்கியுள்ள இடதுசாரிகள் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாயாவதியை பிரதமர் வேட்பாளராக்க அனைத்து தலைவர்களும் முடிவு செய்துள்ள நிலையில், உ.பியில் வேறு யாருக்கும் சீட் தர மாட்ேடன் என்று மாயாவதி கூறியது அவர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக இடதுசாரி தலைவர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில்தான் மாயாவதியை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியுள்ளார். இருப்பினும் உ.பி. சீட் விவகாரம் குறித்து மாயாவதியுடன் தான் பேசவில்லை என்று நாயுடு விளக்கியுள்ளார். அதை விட வேறு பல முக்கிய பிரச்சினைகள் பேசுவதற்கு உள்ளன என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications