நாளை சிரஞ்சீவி கட்சி உதயம்-திருப்பதியில் குவியும் ரசிகர்கள்

திருப்பதியில் உள்ள அவிலாலா குளம் மைதானத்தில் சிரஞ்சீவி கட்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மைதானத்தின் நாலாபுறமும் சிரஞ்சீவியின் மெகா சைஸ் கட் அவுட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் முன்னின்று கவனித்துக் கொண்டிருக்கிறார். மேலும் முன்னாள் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ என்.வி.பிரசாத்தும் ஏற்பாட்டுப் பணிகளில் தீவிர பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஐந்து லட்சம் பேர் கூடுவார்கள் என சிரஞ்சீவி தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்காக 18 சிறப்பு ரயில்களுக்கு சிரஞ்சீவி தரப்பு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் திருப்பதி வழியாக வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சீட் இல்லை. அத்தனையும் புக் ஆகி விட்டன.
மேலும் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் பெருமளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ஏர் டெக்கான், கிங் பிஷர் விமானங்களையும் கூட ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கூட்டத்திற்கு வரவிருக்கும் ஆதரவாளர்களுக்காக விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிகிறது.
தொடக்க விழாவையொட்டி 500 அடி நீளம், 15 அடி உயரத்திலான மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. 400க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்காக தனி கேலரி வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
திருப்பதியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், லாட்ஜுகளிலும் அறைகளை புக் செய்து விட்டனர். கல்யாண மண்டபங்களும் கூட சிரஞ்சீவி ரசிகர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல திருப்பதி திருமலை தேவஸ்தான அறைகளும் கூட பெருமளவில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தின்போது மின்சாரத் தடை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக 15க்கும் மேற்பட்ட தானியங்கி ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிரஞ்சீவி மேடைக்கு வரும்போது ஹெலிகாப்டர் மூலம் அவர் மீது பூக்களைப் பொழியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் விதம் விதமான கோணங்களில் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படவுள்ளன. இதையே ஒரு திரைப்படம் போல எடுக்க சிரஞ்சீவி தரப்பு திட்டமிட்டுள்ளது.
பெருமளவில் கூட்டம் கூடவுள்ளதால் நக்சலைட்டுகள் தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதுதவிர சிரஞ்சீவிக்கென பிரத்யேகமாக 30 தனியார் பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தென்னகத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிரஞ்சீவியின் கட்சி தொடக்க விழா என்பதால், திருப்பதியே கோலாகலமான மூடில் காணப்படுகிறது.
நகரெங்கும் சிரஞ்சீவின் கட் அவுட்கள், பேனர்கள் உள்ளிட்டவை மின்னுகின்றன. சிரஞ்சீவியின் ரசிகர்கள் திருப்பதி நகர் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
இன்று ஹைதராபாத்திலிருந்து கிளம்பி திருப்பதிக்கு வருகிறார் சிரஞ்சீவி. பின்னர் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார். பின்னர் நாளை காலை வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார்.
ராமாராவ் வழியி்ல் திருப்பதியில் போட்டி?:
இந் நிலையில் என்.டி.ராமராவின் வழியைப் பின்பற்றி சிரஞ்சீவியும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications