இலங்கை-2 மாகாண தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி
கொழும்பு: இலங்கையில் இரு மாகாணங்களில் நடந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மத்திய மாகாணம் மற்றும் சபரகமுவா ஆகிய இரண்டு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றது.
இந்த இரு மாகாணங்களையும் ஆளும் கட்சி கைப்பற்றியது.
வடக்கு மத்திய மாகாணத்தில் மொத்தம் உள்ள 33 தொகுதிகளில் 20 இடங்களிலும், சபரகமுவா மாகாணத்தில் மொத்தமுள்ள 44 தொகுதிகளில் 25 இடங்களிலும் ராஜபக்சே கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சியான ரனில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, இரண்டு மாகாணங்களிலும் சேர்த்து 29 இடங்களில் வென்றது.
இனவெறிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா இரு மாகாணங்களிலும் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியுள்ளது.
இது குறித்து ராஜபக்சே வெளியி்ட்டுள்ள அறிக்கையில், இந்த வெற்றி அனைத்து மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு மாகாண மக்கள் அளித்துள்ள கருத்தாக இதை கருத முடியாது. ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கருத்தையே தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. இது நாட்டுக்கே கிடைத்த வெற்றி என்றார்.
இந்த இரு மாகாண அரசுகளையும் ராஜபக்சே சில மாதங்களுக்கு முன் கலைத்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications