10வது நாள்: தொடர்கிறது விசைத்தறிகள் ஸ்டிரைக்
கோவை: கோவை மாவட்டத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. மேலும் பல்லடத்தில் கஞ்சித் தொட்டித் திறந்து மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறனர்.
பெட்ரோல், டீசல் விலையேற்றம், உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் வெட்டு ஆகிய காரணங்களால் விசைத்தறிச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட கூலி உயர்வு தற்போது போதுமானதாக இல்லை எனவே நூறு சதவீதம் கூலியை உயர்த்தி தர வேண்டும் என்று கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சனையில், தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது முறையாக ஜவுளி உற்பத்தியாளர்கள், தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கொண்ட முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், அந்தக் கூட்டத்திலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மறு தேதி குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அண்ணா தொழிர் சங்கம் சார்பில் சோமனூர், மற்றும் பல்லடத்தில் கஞ்சித் தொட்டி திறந்து மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது மேலும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications