கவிழும் கப்பல்: கம்யூனிஸ்டுகளுக்கு வாசன் பதிலடி
மதுரை: கவிழும் கப்பல் யார் என்பதை மக்கள் விரைவில் தீர்மானிப்பார்கள் என்று கம்யூனிஸ்டுகளின் விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் வாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய புள்ளியில் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் செய்சியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் பொறுப்புணர்ச்சியோடும், மத சார்பின்மையோடும், செயல்படும் ஆட்சியாளர்களால் மட்டுமே தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒடுக்க முடியும்.
பிரிவினைவாதிகளும், மதவாதிகளும் ஆங்காங்கே சட்டம் ஒழுங்கு சீர் குழைந்துவிட்டதை போன்ற தோற்றத்தை அரசியல் லாபத்திற்காக ஏற்படுத்த முயல்கின்றனர். இதை காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது.
அணுசக்தி என்ற முக்கிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் கம்யூனிஸ்ட்க்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
எங்களோடு இணைந்து செயல்படக்கூடியவர்கள் மட்டுமே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ளனர். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை எங்கள் ஆட்சியின் சாதனை, மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்களின் பணி, ஆகியவை எங்கள் தேர்தல் வெற்றிக்கு உதவும்.
காங்கிரஸ் பலமான இயக்கமாக திகழ ஒற்றுமையும் கடின உழைப்பும் தேவை. தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவர்களாக தலைவர்கள் இருக்க வேண்டும். தமிழக அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற தொண்டர்களின் உணர்வை தலைமையிடம் கொண்டு செல்வேன்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதே லட்சியம். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் விலகினாலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் கொள்கைகளை ஆதரிக்கும், மதசார்பின்மையை பின்பற்றும் எந்த கட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்.
காங்கிரஸ்தான் முதல் அணி. வெற்றி அணி. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. அப்போது யார் கவிழும் கப்பல் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications