ரெட்டணை-போலீஸை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: ரெட்டணை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக காவல் துறையை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ரெட்டனை கிராமத்தில், வேலை உறுதியளிப்பு திட்டத்தின் அடிப்படையில் வேலைக்குச் சென்றவர்களுக்கு கூலி குறைவாக வழங்கப்பட்டது. இதை கண்டித்தும், ரூ.80 கூலி தர வேண்டும் என்று கோரி கடந்த 16ம் தேதி தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர்.
அப்போது அங்கு வந்த அதிரடிப்படையினரும் , காவல் துறையினரும் மறியல் செய்தவர்கள் மீது சரமாரியாக தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சிபிஎம் ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்வன், அவரது சகோதரர் சட்டக் கல்லூரி மாணவர் தமிழரசை, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராமலிங்கம் உள்பட 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர்.
இதில், மூர்த்தி என்ற இளைஞருக்கு முதுகில் குண்டு பாய்ந்து புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் அத்துமீறலினால்தான் தடியடி, துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என்று கூறிய சிபிஎம், இந்த சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவித்தது.
இந்த நிலையில், ரெட்டணை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தமிழக காவல்துறையை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சிபிஎம் அறிவித்துள்ளது.
அதன்படி வட சென்னையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்பி, டி.கே.சண்முகம், கே.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications