சென்னையில் 50 ஏக்கரில் மெகா கிரிக்கெட் ஸ்டேடியம்
சென்னை: சென்னை அருகே உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகவுள்ளது. இந்த ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டால், மெல்போரன், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் ஸ்டேடியங்கள் சின்ன ஸ்டேடியங்களாகி விடும்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. அப்போது சென்னைக்கு புதிய பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தை நிர்மானிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக சென்னையிலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருங்குழிப்பள்ளம் என்ற இடத்தில் 50 ஏக்கர் இடம் வாங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய, அதி நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டேடியமாக இதை உருவாக்கப் போகிறார்கள். தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர் ஸ்டேடியத்திற்குப் பெயர் சூட்டப்படவுள்ளது.
அளவிலும், சீட் வகையிலும், இந்த ஸ்டேடியம்தான் உலகிலேயே மிகப் பெரிதாக இருக்கும் வகையில் இது கட்டப்படவுள்ளது. விரைவில் இதற்கான காண்டிராக்டரை இறுதிசெய்யவுள்ளது கிரிக்கெட் சங்கம்.
இந்த ஸ்டேடியத்தின் முக்கிய அம்சமாக மழை பெய்யும்போது ஸ்டேடியத்தை மூடும் வகையிலான மேற் கூரையும் பொருத்தப்படவுள்ளது. இதனால் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மழை வந்தாலும் ஆட்டம் நிற்காமல் தொடர்ந்து அதிரடியாக நடந்து கொண்டிருக்கும்.
இதுகுறித்து கிரிக்கெட் சங்கத் தலைவர் என்.சீனிவாசன் கூறுகையில், உலகத் தரத்துடன் கூடியதாக இந்த ஸ்டேடியம் இருக்கும். ஸ்டேடியம் அமையவுள்ள இடத்தை 30 ஆண்டு குத்தகைக்கு அரசு வழங்குகிறது. இதற்காக ரூ. 1 லட்சம் கட்டணத்தை நாங்கள் கட்டியுள்ளோம்.
ஸ்டேடியம் தொடர்பான பணிகளை இறுதி செய்ய சங்கத்தின் செயற்குழு வியாழக்கிழமை கூடி திட்டமிடவுள்ளது.
ஸ்டேடிய வளாகம் 30 ஏக்கரில் அமையும். ஈடன் கார்டன் மற்றும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானங்களில் இருப்பதை விட கூடுதலான ரசிகர்கள் இங்கு அமர முடியும் என்றார் அவர்.
தற்போது மெல்போரன் மைதானம் தான்மிகப் பெரியது. அதில் 1 லட்சம் பேர் அமர முடியும். ஈடன் கார்டன் மைதானத்தில் 90 ஆயிரம் பேரை 'அடைக்கலாம்' என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications