எஸ்.வி.சேகர் வீட்டு கல்யாணத்தில் கருணாநிதி-நீக்கப்படுவாரா?
கடந்த சட்டசபை தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் நெப்போலியனை தோற்கடித்தவர் எஸ்.வி. சேகர். ஆனால், சமீபகாலமாக அவருக்கும் கட்சி மேலிடத்திற்கும் இடையே டேர்ம்ஸ் சரியில்லை.
அவரை கட்சியிலும் ஒதுக்கி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்குக் கூட அவரை ஜெயலலிதா அழைக்கவில்லை. இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.
இதையறிந்த கட்சி தலைமை, உடனடியாக ஆட்களை அனுப்பி எஸ்.வி. சேகரை அங்கிருந்து பொதுக் குழுவுக்கு அழைத்து வர உத்தரவிட்டது. அதிமுகவினர் சேகரின் காலில் விழுந்து அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.
தனது புதிய காருக்கு பேன்சி நம்பர் வாங்கவே கோட்டைக்கு வந்ததாகவும், ராஜினாமா செய்ய வரவில்லை என்றும் சொல்லிவிட்டு பொதுக் குழு கூட்டத்துக்கு கிளம்பிப் போனார் சேகர்.
மேலும் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் பேசியபோது கூட அரசை அவர் கடுமையாக விமர்சிக்கவில்லை. ஜோக் அடித்து திமுகவினரையும் சிரிக்க வைத்துவிட்டு பேச்சை முடித்தார்.
இதனால் அவர் மீது அதிமுக தலைமைக்கு கோபம் அதிகரித்தது. தனது மகள் திருமணத்திற்கும், மகன் அஸ்வின் சேகரை சினிமாவில் அறிமுகப்படுத்தும் விழாவுக்கும் ஜெயலலிதாவுக்கு சேகர் அழைப்பு கொடுத்தும் அவர் வரவில்லை.
இந்த நிலையில் சேகரை வைத்து மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், எஸ்.வி.சேகரின் சகோதரர் மனைவி ஆவார். இவருடைய மகனுக்கு சென்னையில் திருமணம் நடந்தது.
எஸ்.வி.சேகர்தான் திருமண ஏற்பாடுகளை கவனித்தார். திருமணத்திற்கு முதல்வர் கருணாநிதி வந்திருந்தார். மணமக்களுடன் முதல்வர் கருணாநிதியும், எஸ்.வி.சேகரும் சிரித்தபடி போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. குரிப்பாக திமுக இதழான முரசொலியில் முதல் பக்கத்தில் பெரிதாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கல்யாணத்திற்கு வந்த முதல்வரை, எஸ்.வி.சேகர் எதிர்கொண்டு அழைத்துச் சென்றுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. அவரை கட்சியிலிருந்து மேலிடம் நீக்கக் கூடும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது என்பது இதுதானா?