தமிழகத்திலும் சிரஞ்சீவி கட்சியை தொடங்க ரசிகர்கள் கோரிக்கை
சென்னை: ஆந்திராவை கலகலக்க வைத்துள்ள சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் கிளையை தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என தெலுங்கு பேசும் மக்கள் சிரஞ்சீவிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் விரைவில் பிரஜா ராஜ்ஜியம் தமிழகத்திற்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்கிற கட்சியைத் தொடங்கியுள்ளார். ஆந்திராவில் பெரும் எதிர்பார்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் கட்சி, தமிழகத்திலும் கிளை பரப்பும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை கிராமங்களில் தெலுங்கு, கன்னட மொழி பேசுவோர் அதிகம். அதிலும், தளி, கெலமங்கலம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அதிகம்.
இங்கெல்லாம் என்.டி.ஆர். முதல் சிரஞ்சீவி முதல் இளம் தெலுங்கு நடிகர்கள் வரை பலருக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்தப் பகுதிகள் கிட்டத்தட்ட ஆந்திரா, கர்நாடகா போலவே காணப்படும்.
சிரஞ்சீவிக்கு இப்பகுதிகளில் ெபருமளவில் ரசிகர் மன்றங்கள் உள்ளன. தற்போது தங்களது தலைவர் கட்சி ஆரம்பித்துள்ளதால், அதன் கிளையை இப்பகுதியிலும், தமிழத்திலும் தொடங்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிரஞ்சீவியின் கட்சி இப்பகுதிகளுக்கு வந்தால் தளி, ஓசூர், வேப்பணப்பள்ளி சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் அல்லது நமது ஆதரவு இல்லாமல் வேறு யாரும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும் என்பது இவர்களின் எண்ணம்.
எனவே விரைவில் பிரஜா ராஜ்ஜியம் இப்பகுதிகளுக்கும் வரும் என்று இப்பகுதி சிரஞ்சீவி ரசிகர்கள் கூறுகிறார்கள்.