ரங்கசாமிக்கு பதில் புதிய முதல்வர்-இன்று தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி மாற்றப்படுகிறார். அவருக்குப் பதில் புதிய முதல்வரை இன்று மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்கின்றனர். முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது.
ரங்கசாமிக்கு எதிராக அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் ஐந்து பேரும் போர்க்கொடி தூக்கினர். ரங்கசாமிக்கு எதிராக மத்திய அமைச்சர் நாராயணசாமியும் செயல்பட்டு வந்தார். இதனால் புதுவையில் கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டியது. அரசு நிர்வாகமும் ஸ்தம்பித்தது.
இதையடுத்து கட்சி மேலிடம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை நிரூபிக்குமாறு ரங்கசாமிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கூட்டப்பட்ட சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ரங்கசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
மேலும் முன்னாள் முதல்வரும், தற்போதைய அமைச்சருமான வைத்தியலிங்கம் முதல்வராக பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
ரங்கசாமிக்கு ஆதரவாக அவர் உள்பட 2 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக அவர் உள்பட 6 பேர் ஆதரவுதெரிவித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலிடப் பார்வையாளர்களான வயலார் ரவி, அருண்குமார் ஆகியோர் கட்சி மேலிடத்தில் தெரிவித்தனர்.
அந்த முடிவின்படி ரங்கசாமியை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் வைத்திலிங்கம் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
புதுச்சேரியில் பதட்டம்:
முதல்வர் பதவியில் ரங்கசாமி நீடிப்பது இன்றே கடைசி நாள் என்பதால் புதுவையில் அவரது ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரி முழுவதும், குறிப்பாக ரங்கசாமியின் தொகுதியான தட்டாஞ்சாவடி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பதட்டம் இல்லாத ரங்கசாமி:
அதேசமயம்,நேற்று முழுவதும் ரங்கசாமி வழக்கம் போல தனது பணிகளைக் கவனித்தார். சபாநாயகர் ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரைசந்தித்துப் பேசினார்.
மாலையில், கோரிமேடு மைதானத்திற்குச் சென்று டென்னிஸ் ஆடினார். மேலிட முடிவு குறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ள ரங்கசாமி, கட்சி முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.