அரசு உத்தரவை மீறி கேரளாவுக்கு மணல் கடத்தல்
செங்கோட்டை: வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியது. பொதுப்பணி துறை மூலம் குறைந்த விலையில் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
ஆனால் அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு பல்வேறு இடைதரகர்கள் மணல் குவாரிக்குள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அரசின் விதிமுறைகளை மீறி ராட்சத இயந்திரங்கள் மூலம் ஆற்றில் மணல் அள்ளுவது, யூனி்ட் மணல் ரூ.1500க்கும் அதிகமான விலைக்கு விற்பது என்று மணல் கொள்ளை நடத்தி வருகின்றனர்.
கேரளா உள்பட வெளி மாநிலங்களில் மணலுக்கு அதிக விலை இருப்பதால் தமிழகத்திலிருந்தே மணல் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் கேரளாவில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் ஒரு யூனிட் மணல் ரூ.3000க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடை விதித்து கடந்த 25ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. வெளிமாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லும் லாரிகள் பறி்முதல் செய்யப்பட்டு லாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தது.
ஆனால் இந்த அதிரடி தடை உத்தரவை மீறி செங்கோட்டை, புளியரை வழியாக கேரளாவுக்கு தொடர்ந்து மணல் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக எல்லை புளியரையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் களங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் எந்த தடையும் இன்றி மணல் கொண்டு செல்லப்படுகிறது. வழக்கம் போல அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.