கூட்டணிக்காக யார் காலிலும் விழ மாட்டேன்: விஜயகாந்த்
சென்னை: தெய்வமாக நான் வணங்கும் மக்கள் காலில் விழுவேன். ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளை அடிக்கிறவர்கள் காலில் கூட்டணிக்காக என்றும் விழ மாட்டேன். அப்படி ஒரு நிலைமை வந்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் இன்று விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் விஜய்காந்த் பேசுகையி்ல்,
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். தெய்வம் தன் சித்து விளையாட்டை தொடங்கி விட்டதால் திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன.
என் தொண்டர்கள் எனது பிறந்த நாளுக்காக டிஜிட்டல் பேனர்களை வைத்தனர். பகலில் அந்த பேனர்களை அகற்ற துணிவில்லாமல் இரவில் அகற்றியிருக்கிறார்கள்.
அந்த டிஜிட்டல் போர்டுகள் தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்த பணத்தில் தயாரிக்கப்பட்டவை. பேனர்களை கட்டுவதற்கு பயன்படுத்தியது கயிறுகள் அல்ல, தொண்டர்களின் நரம்புகள்.
அவர்களின் உணர்ச்சிகளை புரியாதவர்கள்தான் விஷமத்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். வன்முறையை மட்டுமே அவர்கள் கட்சி தலைவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.
போலீசில் திமுக போலீஸ், அதிமுக போலீஸ் என்று 2 பிரிவுகள் உள்ளன. இந்த நிலை மாறினால்தான் நாட்டுக்கு நல்லது. மக்கள் சிந்தித்து பார்த்து நல்ல கட்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.
என்னிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து 2 ஆண்டுகள் அவகாசம் தந்தால் சமச்சீர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்தி லஞ்சத்தையும் ஒழித்து காட்டுவேன்.
தெய்வமாக நான் வணங்கும் மக்கள் காலில் விழுவேன். ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளை அடிக்கிறவர்கள் காலில் கூட்டணிக்காக என்றும் விழ மாட்டேன். அப்படி ஒரு நிலைமை வந்தால் அவர்கள் காலில் விழுவதை விட தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றார் விஜய்காந்த்.
நிகழ்ச்சியின்போது கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜய்காந்த்தின் மச்சானுமான சுதீசும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications