கூட்டணி: அதிமுக-தேமுதிக-சரத்துடன் பேச்சு- பாஜக
சென்னை: கூட்டணி தொடர்பாக அதிமுக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி ஆகியோருடன் நாங்கள் பேசி வருகிறோம் என பாஜக ராஜ்யசபா எம்பியான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
அவர் பேசுகையில்,
டீசல், பெட்ரோல் பற்றாக்குறையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக சென்னையை சுற்றியிருக்கும் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும்.
அதை போல் மின்தட்டுப்பாடு பிரச்சினையும் பெரிதாக உருவெடுத்துள்ளது. இரவில் பல இடங்களில் மின்சாரம் இல்லை.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு நாடாளுமன்ற கூட்ட தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்டு- செப்டம்பரில் நடத்தப்பட வேண்டிய கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் சந்திக்க பயப்படுகிறது. எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை கண்டு அஞ்சுகிறது.
4 அல்லது 5 மாத ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டத்திற்கு வர விடாமல் செய்து, வெற்றி பெற்ற காங்கிரஸ் அரசு, கூட்டத்தை நடத்தினால் புயல் வீசும் என்பதால் கூட்டம் நடத்த தயங்குகிறது.
வட மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும். பாஜக அங்கே ஆட்சியை பிடிக்கும். அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது.
ஓகேனக்கல் தமிழ்நாட்டிற்கு சொந்தமானது. இதில் கர்நாடக அரசு பிரச்சனை செய்யக்கூடாது. தமிழகத்தின் பக்கம் தான் நியாயம் உள்ளது. இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்.
கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்காதவர்களுடன் நாங்கள் கூட்டணி உடன்பாடு காண்போம். அதிமுக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி இப்படி எல்லா கட்சிகளுடனும் நாங்கள் பேசி வருகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் போது கூட்டணி பற்றி அறிவிப்போம்.
திமுக கூட்டணியில் மீண்டும் பாமக இணைந்தால், அந்த கட்சியின் தொண்டர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த இரு கட்சிகளும் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்பது என் கருத்து என்றார்.