முஷாரப் நீக்கிய 60 நீதிபதிகளில் 8 பேர் மறுநியமனம்

முஷராப் தனது ஆட்சிக் காலத்தில், தனது உத்தரவுகளுக்கு அடிபணியாத 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.
இதனால் நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டம் தான், கடைசியில் அவரது பதவியையே பறிக்கும் நிலைக்கு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது.
இந்த நீதிபதிகளை உடனே மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என பாகிஸ்தான் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த பாகி்ஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப் கூறி வந்தார்.
ஆனால், இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் இழுத்தடித்தார் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான சர்தாரி.
இதனால் நவாஸ் கடுப்பில் இருந்த நிலையில் அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவதாக அறிவித்தார். அதிபராக எந்தக் கட்சியையும் சாராத நடுநிலையான ஒருவர் வர வேண்டும் என்று கூறி வந்த நவாஸ், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார்.
இதையடுத்து நவாஸ் ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்ட சர்தாரி, அவர் விதித்த முக்கிய நிபந்தனைகளில் ஒன்றான நீதிபதிகள் மறுநியமனத்துக்கு முன் வந்துள்ளார்.
நீக்கப்பட்ட 60 நீதிபதிகளில் முதல் கட்டமாக 8 நீதிபதிகளை சிந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக சர்தாரி அரசு மறு நியமனம் செய்துள்ளது.
ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து முஷாரப்பால் நீக்கப்பட்ட இப்திகார் செளவுத்ரிக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் இன்னும் பதவிகளை வழங்கவில்லை சர்தாரி.
ஆட்சியில் நீடிக்கவும், அதிபர் தேர்தலில் வெல்லவும் சர்தாரிக்கும் அவரது கட்சிக்கும் ஷெரீப்பின் ஆதரவு மிக அவசியம் என்பதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மற்ற நீதிபதிகளும் படிப்படியாக மீண்டும நியமிக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications