நடுக்கடலில் 6 கப்பல்கள் கடத்தல்- 10 இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கதி?
{image-Gulf of Aden-map250_28082008.jpg tamil.oneindia.com}ஏமன்: அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த 6 சரக்குக் கப்பல்களை சோமாலியாவைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
இதில் ஒரு கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 10 ஊழியர்கள் உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தக் கடத்தல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏமனுக்கும் சோமாலியாவுக்கும் இடையே அரபிக் கடலில் உள்ள ஏமன் வளைகுடாவில் இந்தக் கடத்தல்கள் நடந்தன. இந்தக் கப்பல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களும் மாலுமிகளும் உள்ளனர்.
முதலில் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு சரக்குக் கப்பலைக் கடத்திய கொள்ளையர்கள், அடுத்தடுத்து பனாமா, ஜப்பான், மலேசியா, ஜெர்மன் உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த கப்பல்களைக் கடத்தினர்.
இந்தியப் பெருங்கடலையும் மத்தியத் தரைக் கடலையும் ( Mediterranean sea) இணைக்கும் இந்த வளைகுடா பகுதி வழியாகத் தான் அரேபிய நாடுகள்-ஐரோப்பா இடையே கப்பல்கள் இயங்குகி்ன்றன.
இதில் பெரும்பாலானவை கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்களே.
சேமாலியாவில் நடந்து வரும் இனப் போரால் அந்தப் பகுதியே பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. இந் நிலையில் தான் இந்தக் கடத்தல்கள் நடந்துள்ளன.
கடத்தப்பட்டுள்ள கப்பல்களில் ஒ ன்றான எம்.சி.விக்டோரியாவில் இந்தியத் தொழிலாளர்கள் 10 பேர் பணியாற்றி வருகின்றனர்.
ராக்கெட் லாஞ்சர்களுடன் அதிவேகப் படகுகளில் வந்து கப்பல்களை கொள்ளையர்கள் கடத்துவதும், பின்னர் பெரும் அளவில் பணம்-பொருட்களை வாங்கிக் கொண்டு விடுவிப்பதும் இந்தப் பகுதியில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு பயணிகள் கப்பல்களும் தப்புவதில்லை.
ஆனால், ஒரே நேரத்தில் 6 கப்பல்களை இவர்கள் கடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் ஒரு ஜப்பானிய கப்பலை கடத்தும் முயற்சி வெல்லவில்லை. ராக்கெட் லாஞ்சர்களால் தாக்கப்பட்டாலும் கூட அந்தக் கப்பல் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிவிட்டது.
கடத்தப்பட்டுள்ள மலேசிய கப்பல் பாமாயில் ஏற்றிச் சென்றதாகும். ஈரான் கப்பல் கச்சா எண்ணெயும், ஜப்பானிய கப்பல் ரசாயனப் பொருட்களையும் ஜெர்மன் கப்பல் உணவு உள்ளிட்ட சரக்குகளுடனும் சென்று கொண்டிருந்தன. இவை தவிர வேறு இரு கப்பல்களும் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றவை. இந்தக் கப்பல்களில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகளும், ஊழியர்களும் உள்ளனர்.
இதற்கிடையே மலேசிய கப்பலில் கொள்ளையர்கள் ஏறி தாக்கியபோது அதிலிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஊழியர் கொல்லப்பட்டுள்ளார் என மலேசியா கூறியுள்ளார்.
சோமாலியாவில் இப்போது அரசாங்கம் என்று ஏதும் இல்லை. கடற்படையும் இல்லை. இதனால் கடல் கொள்ளையர்களை ஒடுக்க மற்ற நாட்டு கப்பல் படைகள் தாக்குதல் நடத்த, கடந்த மாதம் தான் ஐ.நா. சபை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.