அமெரிக்காவுடன் மீண்டும் பனிப் போருக்கு தயார்-ரஷ்யா
ஜார்ஜியா மீதான ரஷ்ய தாக்குதலைத் தொர்ந்து அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. ஜார்ஜியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறது ரஷ்யா.
இந்த நிலையில் ஜார்ஜியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஷியா ஆகிய பகுதிகளை தனி நாடாக அங்கீகரித்துள்ளது ரஷ்யா. இதுதொடர்பான உத்தரவில் மெத்வதேவ் கையெழுத்திட்டுள்ளார்.
இதையடுத்து ரஷ்ய டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் எதற்கும் பயப்படவில்லை. புதிய பனிப் போரை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் வந்தால் சந்திக்கத் தயார். எங்களது தோழர்கள் எடுக்கும் நடவடிக்ைககளைப் பொறுத்தது அது.
நாங்கள் ஏன் தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஷியாவின் இறையாண்மையை அங்கீகரித்துள்ளோம் என்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் தேர்தல் வருகிறது. அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள், இந்த விவகாரத்தை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள்.
சர்வதேச சட்டப்படிதான் அப்காஷியா மற்றும் தெற்கு ஓசேஷியாவின் இறையாண்மையை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. கொசோவோ சுதந்திரம் குறித்த விவாதத்தின்போது, கொசோவோ விஷயம் வேறு என்று வியாக்கியானம் பேசின மேற்கத்திய நாடுகள்.
சுதந்திரம் தொடர்பான ஒவ்வொரு பிரச்சினையும் விசேஷமானதுதான். கொசோவோ சிறப்பு கேஸ் என்றால், அப்காஷியாவும் அப்படித்தான், தெற்கு ஓசேஷியாவும் அப்படித்தான்.
சமீப காலம் வரை அங்கு ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றோம். ஆனால் எங்களைத் தாக்க ஜார்ஜியா முடிவெடுத்ததால் அந்த முயற்சியை நாங்கள் விட நேரிட்டது.
தெற்கு ஓசேஷியாவும், அப்காஷியாவும் தாக்கப்பட்டால், அதை ரஷ்யா பார்த்துக் கொண்டிருக்காது. இரு பிராந்தியங்களுக்கும் தேவையான பாதுகாப்பை ரஷ்யா வழங்கும்.
அப்காஷியாவும், தெற்கு ஓசேஷியாவும் சுய பாதுகாப்பு பெறும் வரையில் அவர்களை நாங்கள் பாதுகாப்போம். அவர்களுக்கு ஆபத்து என்றால் உடனடியாக உதவிகள் செய்வோம் என்றார் மெத்வதேவ்.
அமெரிக்கா - ஐரோப்பிய யூனியன் - ஜார்ஜியா கண்டனம்
இதற்கிடையே, ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜார்ஜியா ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் முடிவு ஏற்க முடியாதது, வருத்தத்திற்குரியது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜார்ஜியா அதிபர் மைக்கேல் சாக்ஷ்வில்லி கூறுகையில், ஜார்ஜியாவை உடைக்கப் பார்க்கிறது ரஷ்யா. இதன் மூலம் நீண்ட கால பகைமைக்கு அது வித்திடுகிறது. உலக வரைபடத்திலிருந்தே ஜார்ஜியாவை ஒழித்துக் கட்ட ரஷ்யா முயலுகிறது.
ரஷ்யாவின் செயல் சட்டவிரோதமானது. இதற்கு எந்தவகையான சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை. ஜார்ஜியாவோ அல்லது உலக நாடுகளோ ரஷ்யாவின் இந்த செயலை ஏற்கப் போவதில்லை.
படை பலத்தால் ஐரோப்பாவின் எல்லையை மாற்ற முயன்ற ஹிட்லருக்குப் பின்னர், ஸ்டாலினுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்ைக இது என்றார் அவர்.
90களில் சோவியத் யூனியன் சிதறுண்டபோது, ஜார்ஜியாவும் தனி நாடானது. அந்த நாட்டுடன் இணைந்திருந்த அப்காஷியாவும், தெற்கு ஓசேஷியாவும் தனி நாடுகளாக விரும்பி போராட்டத்தில் குதித்தன. அதை ஜார்ஜியா ஒடுக்கி வந்தது. ஆனால் இரு பிராந்தியங்களின் போராட்டத்திற்கும் ரஷ்யா ஆதரவு தெரிவித்தது. அதுவே தற்போது பிரச்சினை பெரிதாக வழி வகுத்துள்ளது.
இதற்கிடையே, தெற்கு ஓசேஷியா மற்றும் அப்காஷியா பிராந்திய அதிபர்கள் மாஸ்கோ வந்துள்ளனர். ரஷ்யா நாடாளுமன்றம் தங்களை தனி நாடுகளாக அங்கீகரிக்கக் கோரி ரஷ்யாவை வலியுறுத்த அவர்கள் வந்துள்ளனர்.
தெற்கு ஓசேஷியாவின் அதிபர் எட்வர்ட் கொகோய்டி, அப்காஷியா அதிபர் செர்ஜி பகாப்ஷ் ஆகியோர் மாஸ்கோ வந்து ரஷ்ய தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இரு தலைவர்களும் ரஷ்ய நாடாளுமன்றத்திலும் பேசவுள்ளனர்.