அராஜம் செய்யும் திமுகவினர்-தேமுதிக புகார்
சென்னை: தேமுதிகவின் வளர்ச்சியைப் பொறுக்காமல் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் என்று தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில், நேற்று சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு இடையே மோதல் மூண்டது.
இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கள் தெரிவிக்க இரு தரப்பினரும் வந்தனர். அப்போது இரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
காவல் நிலையத்திற்குள்ளேயே இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேமுதிகவைச் சேர்ந்த 14 பேரும், திமுகவைச் சேர்ந்த 8 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக தேமுதிக மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் மாநில பொருளாளர் சுந்தரராஜன், மாநில தேர்தல் பிரிவு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு துணை செயலாளர் சவுந்தரபாண்டியன் உட்பட முக்கிய பிரமுகர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கமிஷனரிடம் புகார் மனு கொடுக்க வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த 300க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் இன்று காலையில் இருந்தே கமிஷனர் அலுவலகம் முன்பு கூடினர். உதவிக் கமிஷனர் இளங்கோவன் தலைமையில் போலீசார் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.
பகல் 12.45 மணியளவில் கமிஷனரிடம் சுதீஷ் புகார் மனுவை கொடுத்தார். முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கமிஷனர் அலுவலகத்தினுள் அனுமதிக்கப் பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிகவின் வளர்ச்சியை திமுகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் இதுபோன்று அராஜக செயல்களில் அவர்கள்
ஈடுபடுகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications