மிரட்டும் அழகிரியின் ஆர்.சி.வி: ஆபரேட்டர்கள்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் புதல்வர் மு.க.அழகிரியின் ஆதரவோடு தொடங்கப்பட்டிருக்கும் ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திலிருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக மதுரையைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் நல சங்கத் தலைவர் டி.வி.ரமேஷ் கூறுகையில், எஸ்.சி.வியிலிருந்து விலகி ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தில் சேர வேண்டும் ஆபரேட்டர்களை ஆர்.சி.வி.யைச் சேர்ந்தவர்கள் மிரட்டி வருகின்றனர்.
நாங்கள் யாரும் மதுரைக்கு திரும்பிச் செல்ல முடியாத அளவு நிலைமை உள்ளது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. கொலை மிரட்டல்கள் வருகின்றன.
நாங்கள் போலீஸில் புகார் கூறப் போனால் அவர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறினால் அண்ணனிடம் போய் சொல்லுங்கள் என்று அவரே அழகிரிக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கிறோம். எனவே எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரப் போகிறோம். மேலும் ஆர்.சி.வியின் மிரட்டல்கள் தொடர்ந்தால் நாடாளுமன்றத்திற்கு எதிரே உண்ணாவிரதம் இருக்கவும் தீர்மானித்துள்ளோம்.
மதுரையில் உள்ள கேபிள் டிவி உரிமையாளர்களில் 90 சதவீதம் பேர் ஆர்.சி.விக்கு மாறி விட்டனர். எஸ்.சி.வியை விட்டு விலகாமல் இருக்கம் ஆபரேட்டர்களை திமுகவினர் மிரட்டி வருகின்றனர் என்றார் ரமேஷ்.