கோவை-முடிவுக்கு வந்த விசைத்தறி ஸ்டிரைக்
கோவை: கோவை மாவட்டத்தில் கூலி உயர்வு கேட்டு கடந்த பதிமூன்று தினங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்த விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.
கோவை மற்றும் அதன் சுற்றுப் புறத்தில் பல லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த விசைத்தறிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு கோரி வந்தனர்.
தொடர் மின்தடை, டீசல் விலை உயர்வு, விசைத்தறி உதிரி பாகங்களின் விலை உயர்வு, போன்ற பல காரணமாக நூறு சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சார்பில் வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் பல்லடத்தில் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு, நியாயமான கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இது தொடர்பாக அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரநிதிகள், விசைத்தறி முதலாளிகள் ஆகியோருடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
தொடர்ந்து நடந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.40 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அன்பரசன், மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ரகத்திற்கு ஏற்ப கூலி உயர்வு வாங்க முடிவு செய்யப்பட்டது. சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் முடிவுக்க வந்துள்ளது.












Click it and Unblock the Notifications