வாசு வீட்டை முற்றுகையிட்ட சவரத் தொழிலாளர்கள் கைது
சென்னை: குசேலன் படத்தில் சவரத் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச் சங்கம் சார்பில் இன்று சென்னையில் உள்ள இயக்குநர் பி.வாசுவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
குசேலன் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி படத்தின் இயக்குநர் பி.வாசுவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் அறிவித்தது.
அதன்படி இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள வாசுவின் வீடு அருகே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டனர். அனைவரும் பி.வாசுவை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் வாசு வீட்டை நோக்கி நகரத் தொடங்கினர். அப்போது போலீஸார் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.
சவரத் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளை நீக்காவிட்டால் குசேலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் அடுத்து போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.