டீ குடி; வண்டி ஓட்டு-போலீசின் புதிய திட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் அதிகாலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க ஓட்டுநர்களுக்கு டீ கொடுக்கும் புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் வழியாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலைகள் நான்கு வழிப்பாதையாக உள்ளதால் வாகனங்கள் அதி வேகத்தில் செல்கின்றன.
அதிகாலை நேரங்களில் ஓட்டுநர்கள் தூக்க்க் கலக்கத்தோடு வாகனங்களை ஓட்டும்போதுதான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுவதாக போலீசார் நடத்திய ஆய்வின் போது தெரியவந்துள்ளது. இது போன்ற விபத்துக்களைத் தடுக்க காஞ்சிபுரம் போலீசார் ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதற்குப் பெயர் டீ குடி வண்டி ஓட்டு என்பதாகும். இதன் அறிமுக நாளன்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தேசிய நெடுங்சாலையில் உள்ள வாகன சோதனை சாவடிகளின் அருகே எஸ்.பி. பெரியய்யா தலைமையில், சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்களுக்கு முகம் கழுவ தண்ணீர் வழங்கினர் போலீசார்.
பிறகு நாற்காலில் அமர வைத்து சூடான டீ குடிக்க கொடுத்தனர்.
ஓட்டுனர்கள் உற்சாகமடைந்த பிறகு போக்குவரத்து விதிமுறைகளை விளக்கிக் கூறினார், எஸ்.பி பெரியய்யா.
வாகனம் ஓட்டும் போதும் உறக்கம் வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் செல்ல வேண்டும். இலவசமாகக் கொடுக்கப்படும் தேநீரைக் குடித்து களைப்பைப் போக்கிக் கொண்ட பின் திரும்பவும் ஓட்ட ஆரம்பிக்க வேண்டும். பயணிகள் உங்களை நம்பித்தான் பயணம் செய்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு பேருந்தை கவனமாக ஓட்ட வேண்டும், என்று அறிவுரை வழங்கினார் பெரியய்யா.
இந்த திட்டம் ஓட்டுனர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் எத்தனா நாட்களுக்கு இதைச் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தாலும், போலீஸ் அதிகாரிகள் ஒரு நல்ல விஷயத்துக்காக தங்கள் லாரிகளை மடக்கியதைக் கண்டு பெரும் சந்தோஷமடைந்துள்ளனர் லாரி ஓட்டுநர்கள்!