ஜெ தொல்லை இருக்காது-திருநாவுக்கரசர் நம்பிக்கை
சிங்கம்புணரி: மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் நான் போட்டியிடக் கூடாது என்று இந்த முறை எனக்கு ஜெயலலிதாவால் பிரச்சனை வராது என பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சில நிபந்தனைகள் போட்டார். அதில் ஒன்று, திருநாவுக்கரசருக்கு புதுக்கோட்டை தொகுதியில் நிற்க வாய்ப்பு தரக் கூடாது என்பது.
இதை வேறு வழியில்லாமல் வாஜ்பாயும் அத்வானியும் ஏற்றனர். திருநாவுக்கரசரை சமாதானப்படுத்த அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியைத் தந்தனர்.
புதுக்கோட்டையில் வெல்ல வாய்ப்பிருந்த திருநாவுக்கரசரை ஜெயலலிதா தடுத்ததால் அந்தத் தொகுதியையும் திமுக கூட்டணி வென்றது.
இந் நிலையில் இப்போது மீண்டும் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக முயன்று வருகிறது. இந்தக் கூட்டணி உருவானால், திருநாவுக்கரசருக்கு மீண்டும் ஜெயலலிதாவால் சிக்கல் வரக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தீவிரவாதிகளை ஜாதி, மதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பொடா போன்ற கடுமையான சட்டங்கள் வேண்டும்.
இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சி எந்தக்கட்சியோடு கூட்டு சேரப் போகிறது என்பதை சொல்ல முடியாது. ஆனால், எந்தக்கட்சியும் தனியாக நிற்க முடியாது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவிடம் கெஞ்சுவதை தவிர வேறுவழியில்லை. அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏற்பட்டால் கடந்தமுறை போல நான் தேர்தலில் நிற்ககூடாது என்று அவர்கள் நிபந்தனை விதிக்க வாய்ப்பில்லை.
மக்களவைத் தேர்தலில் நான் சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் கட்சி தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என்றார்.
6ம் தேதி கூட்டணி பேச்சுவார்த்தை:
இந் நிலையில் தமிழகத்தில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து விவாதிக்க வரும் 6ம் தேதி பாஜக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடக்கவுள்ளது.
இதில் திருநாவுக்கரசர், மாநில பாஜக தலைவர் எல்.கணேசன், எச்.ராஜா உள்ளிட்டோர் பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
தமிழகத்தில் ஓட்டு வங்கி இல்லாத பாஜகவை விட இடதுசாரிகள் வந்தால் அவர்களுடன் கூட்டு சேரவே ஜெயலலிதா ஆர்வகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனால் தேமுதிகவுக்கு, சரத்குமாருக்கு பாஜக வலை வீசலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications