புதுவை-வைத்திலிங்கம் 3ம் தேதி பதவியேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக வைத்திலிங்கம் வரும் 3ம் தேதி பதவியேற்பார் என்று தெரிகிறது.
ரங்கசாமி முதல்வர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். பின்னர் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும், திமுக, பாமகவின் நிபந்தனையற்ற ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் கோவிந்த் சிங்குர்ஜாரை சந்தித்து வைத்திலிங்கம் வழங்கினார்.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய ஆட்சி அமைக்க ஜனாதிபதியின் ஒப்புதல் அவசியமாகும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அறிக்கை ஒன்றை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார் ஆளுநர்.
இந்த ஒப்புதல் மற்றும் மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து வரும் 3ம் தேதி புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெறுகிறது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
இதனிடையே நேற்று டெல்லிப் புறப்பட்டுச் சென்ற வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலை சந்தித்து பேசினார். மேலும் கட்சியின் மூத்த தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இலாக்காக்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்திகள் உண்மையல்ல. காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்களும் ராணுவ சிப்பாய்கள் போல செயல்படுவார்கள். புதுவை நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் விரைவுபடுத்தப்படும் என்றார்.